
தங்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகளை எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தங்கள் மகனுக்கு எழுதி வைத்த சொத்துகளை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தங்கள் மகனுக்கு சொத்துகளை எழுதி வைத்த நிலையில், வயதான காலத்தில் தங்களை கவனிக்காததாலும், மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமல் இருந்ததாலும் அதனை ரத்து செய்ய கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மகன்களின் செயல்பாடு இதயமற்றது என கருத்து தெரிவித்து நீதிபதி, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, கவனிக்காத குழந்தைகளுக்கு சொத்துகள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தந்தை மகற்காற்றும் நன்றி என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்த நீதிபதி ஆஷா, பொது பண்புகளின் முக்கியத்துவத்தை சமுதாயம் வேகமாக இழந்து வருவதாக வேதனை தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News