நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் ஓப்பந்த நிறுவன மேலாளர் நிலை தடுமாறி விழுந்து, அரசு பேருந்து அவர் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனத்தின் மேலாளராக குமாரபாளையம் பகுதியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குமாரசாமி இரு சக்கர வாகனத்தில் சேலம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மின்வாரிய அலுவலகம் பகுதியில், சாலையின் குறுக்கே நாய் சென்றதால் பிரேக் பிடித்ததில், குமாரசாமி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பக்கவாட்டில் வந்த அரசு பேருந்து குமாரசாமியின் தலை மீது ஏறியது. இதில் மேலாளர் குமாரசாமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சாலையின் குறுக்கே நாய் சென்றதால் விபத்து நிகழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் நாய் இருசக்கர வாகனத்தின் குறுக்கே செல்லும்போது குமாரசாமி தடுமாறி கீழே விழ தலை மீது பேருந்து ஏறும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதுபோன்று நாய்கள் அதிகரித்து வரும் காரணத்தினால் கடந்த காலங்களைப் போல நகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலுவான கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News